புத்தாண்டே வருக! புன்னகையை தருக!!

Sunday 31 December 2023  at December 31, 2023;

 



2023 எப்படி இருந்தது.

என் கம்பெனியை மீண்டும் மடிப்பாக்கத்தில் ஆரம்பித்து வெற்றிகரமாக இதோ 11 மாதங்கள் கடந்து கொண்டு வந்து விட்டேன். அதுவே சாதனைதான். முந்தைய மூன்று ஆண்டுகள் 2020, 2021, 2022 வீட்டிலிருந்து வேலை செய்து இந்த 2023 ஆண்டு ஆபிஸில் வேலை செய்தது மனதுக்கு நிம்மதியாக இருந்தது. இறைவனுக்கு நன்றிகள். புது ஆபிஸ் பிடிப்பதற்கு நானும் எனது தம்பியும் இந்த மடிப்பாக்கம் ஏரியாவையே சல்லடை போட்டு தேடினோம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் செலவு செய்திருப்போம். இறுதியாக இந்த ஆபிஸ் கிடைத்தது. இந்த நேரத்தில் எனது தம்பிக்கும் நன்றிகள் மற்றும் அன்பு. அவனில்லை என்றால் இது எனக்கு கிடைத்திருக்குமா என்று தெரியாது.


வியாபாரம் எப்படி இருந்தது? கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் டீம் இல்லாமல் மிகவும் கஷ்டபட்டேன். வெளியே அவுட்சோர்ஸிங் செய்ததால் அதிகமான காலதாமதம் ஆனது அதனால் கஸ்டமர்களிடம் கொஞ்சம் கெட்ட பெயர் வாங்க வேண்டிய சூழ்நிலை அதனால் தான் நான் ஆபிஸ் வைக்கவேண்டும் என்று நினைத்தேன். இப்பொழுது பெரிய டீம் இல்லை என்றாலும் இருக்கும் ரிசோர்ஸ் வைத்து கஸ்டமர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டேன். கிட்டதட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு எப்படி மடிப்பாக்கத்தில் ஆரம்பித்தேனோ அதே இடத்திற்கு வந்து நிற்பது போல் ஒரு உணர்வு. எனிவே, தோற்கிறோமோ அல்லது ஜெயிக்கிறோமா ஆனால் நான் களத்தில் இருக்கிறேன். சண்டை செய்கிறேன். அதுவரை எனக்கு மகிழ்ச்சி. 


என்னுடைய டீமுக்கு சிறுது நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் என்னுடைய கனவு project ஆன pricefinder.in ஐ உருவாக்க உபயோகித்துகொண்டேன். கிட்டதட்ட ஆயிரம் மணிநேரம் கடந்து இந்த project யில் அவர்கள் வேலை செய்திருக்கிறார்கள். தீபாவளிக்குள் முழுமையாக முடிந்துவிடும் என்று நினைத்தேன் ஆனால் மற்ற ப்ராஜக்ட்டுகள் இருப்பதால் இதனை தள்ளி  வைக்கும்படி ஆகிவிட்டது. வெண்டாருக்கான flutter ஆப் செய்வது மற்றும் 3rd party ஆப்களுடன் இண்டகிரேட் செய்வது என கொஞ்சம் வேலை மிச்சம் இருக்கிறது. எப்படியும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் எதிர்பார்க்கலாம். இந்த ப்ராஜக்ட் வந்தால் எங்களுக்கு வெப்சைட் ஆர்டர்கள் இங்கு லோக்கலில் கிடைக்கும் அத்துடன் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் மாத வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கடமையை செவ்வனே செய்வோம் பிறகு பலனை எதிர்பார்ப்போம். 


மொத்தத்தில் 2023 ஆம் ஆண்டு பணவிஷயத்தில் மிகுந்த பலனை கொடுக்கவில்லை என்றாலும் நான் என்னுடைய பயணத்தை மீண்டும் தொடருவதற்கு தோதுவான வருடமாக இருந்தது. ரோலர் கோஸ்டர் பயணத்தில் ஒரு சுற்று முடிந்து அடுத்த சுற்று போய்கொண்டிருக்கிறது, இந்த பயணத்தில் விட்ட விஷயங்களை மீண்டும் பிடித்துவிடுவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எப்படி அவ்வளவு நம்பிக்கையாக சொல்கிறேன் என்கிறீர்களா? பத்து வருட அனுபவம் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்திருக்கிறது. 


விடா முயற்சி வெற்றி தரும். என்னைபோல் நீங்கள் நினைத்ததும் இந்த 2024 ஆண்டு நடந்து நமக்கு எல்லாம் கொடுக்ககூடிய ஆண்டாக அமைத்து தருவதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த புத்தாண்டு நமக்கு சிறந்த ஆண்டாக அமையும். 


இந்த தளத்தை படிக்கும் வாசகர்கள், என்னுடைய நண்பர்கள், என்னுடைய ஊர்காரர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


என்றும் அன்புடன்,

முகமது காமில் தாஜூதீன்.

வருக புத்தாண்டு! தருக நல்லாண்டு!!

Saturday 31 December 2022  at December 31, 2022;




 இதோ அதோ என்று எப்படியோ 2022 ம் ஆண்டு முடிவடைந்துவிட்டது. இந்த ஆண்டு வியாபார ரீதியாக மிகவும் பின்னடைவான வருடம். 2020 ம் ஆண்டு நான் பிடித்த அலுவலக கட்டிடம்,  தொடர்ச்சியாக வீட்டில் இருந்து வேலை செய்ததால் அந்த அலுவலகத்தை திறக்கவே முடியாமல் பெரும் பணத்தை இதில் வாடகையாக செலவு செய்துவிட்டேன். அந்த அலுவலகத்தை இந்த வருடத்தோடு முடித்துவிட்டேன். அது ஒரு நிம்மதி. மாதம் பிறந்தால் இந்த வாடகை தொல்லையிலிருந்து ஒரு விடுதலை. 


அடுத்ததாக ஒரு புதிய புராஜக்டை ஆரம்பம் செய்வதற்கு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோடு பேசி வருகிறேன். அது நல்லபடியாக முடிந்தால் 2013 பெரும் முன்னேற்றத்தை தரும். இது சாதாரண புராஜக்ட் கிடையாது, இது எனது கனவு புராஜக்ட் எனவும் சொல்லலாம். சொல்லலாம் என்ன, அதுவேதான். ஒவ்வொரு முறையும் நானும் இங்கே சென்னையில் ஏதாவது வெப் டெவலப்மெண்ட் புராஜக்ட் பிடிக்கலாம் என நினைக்க முனையும்போது எல்லாம் என்னை ஒரு விஷயம் தடுத்துகொண்டே இருந்தது. அந்த தடுத்தவிஷயம்தான் இப்பொழுது திருப்புமுனையாக போகிறது. பார்ப்போம் எந்தளவுக்கு இது இருக்கபோகிறது என்று. 


மோசமான ஆண்டு என்று ஒன்று இல்லை அது நம் முயற்சியின்மையால் நாம் வருடத்தை குறைசொல்வது அன்றி வேறில்லை. இயற்கையால் நிகழும் சில துக்க சம்பவங்கள்தான் அந்த ஆண்டை மோசமான ஆண்டா, இல்லையா என தீர்மானிக்கும். மற்றபடி பொருளாதார பின்னடைவுகள் எல்லாம் ஜூஜூபி. எவ்வளவோ பார்த்தாச்சு, இதை பார்க்க மாட்டோமா என்ன? 


வயது ஆக ஆக பக்குவம் வளர்கிறது. அது நிறைய பொருமையை கற்று தந்துள்ளது. தொடர் முயற்ச்சி என்பதே அந்த பக்குவத்தின் தன்மைதான் அன்றி வேறில்லை. என்னுடைய கனவு என்பது 45 வயதில் அனைத்தையும் பெற்றிருக்கவேண்டும். அது அடுத்த பல ஆண்டுகளுக்கு எனக்கு உதவுவதாக இருக்கவேண்டும். அதனாலேயே என் கனவு புராஜக்டை நினைவாக்கிட களம் இறங்கியுள்ளேன். 


அடுத்த இரண்டு ஆண்டுகள் பெரும் உழைப்பை இது கோரும் ஆனால் அது வரக்கூடிய ஆண்டுகளை சுலபமாக்கிவிடும் என்பதாலேயே அந்த பெரும் உழைப்பை வழங்கிட தயாராகிவிட்டேன். 2023 யாருக்கு சிறப்பான ஆண்டோ இல்லையோ எனக்கு இது மிகவும் முக்கியமான ஆண்டு. நெஞ்சம் நிறைய இந்த ஆண்டை வரவேற்க்கிறேன். பின்னடவை சந்தித்தபோதும் 2022 மோசமான ஆண்டு இல்லை என்பதால் அதற்கு பிரியாவிடை கொடுக்கிறேன்.


வேறு ஏதாவது இருக்கிறதா இன்னும் எழுத? என்னுடைய இந்த பிளாக் புத்தாண்டை வரவேற்கும் ஆண்டிற்கான கட்டுரை எழுத மட்டுமே என்பதுபோல ஆகிவிட்டது என்பதில் எனக்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. நிறைய எழுதவேண்டும், ஆனால் டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கிறேன், இயன்றால் அதில் என்னை பின்தொடருங்கள். ஆனால் அதில் கூட நிறைய எழுத முடிவதில்லை. பொருங்கள். இந்த புராஜக்ட் வெற்றி பெறட்டும் பிறகு முழு நேர எழுத்தாளராக மாறிவிடுகிறேன். ;) முதலில் இந்த பொருளாதர பிரச்சனையிலிருந்து ரிட்டையர்மெண்ட் வாங்கவேண்டும். 


என்னுடைய கனவு நிஜம் பெற்று வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டும் அதே வேளையில் உங்கள் கனவுகளும் மெய்பட எனது இறைவன் அருள்வானாக. 


எனது நண்பர்கள், வாசகர்கள், மன்னை மாநகர சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

2022 - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Friday 31 December 2021  at December 31, 2021;


 

கடைசி ஒரு மணி நேரம் போதுமா என்னுடைய ஒரு வருட அனுபவத்தை சொல்ல, நிச்சயமாக முடியாது. உப்பு விக்கபோனா மழை பெய்யுது, பொரி விக்க போனா சூறாவளியே அடிக்குது. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ எனக்கு கன கச்சிதமாக பொறுந்துகிறது. மண்டையை கசக்கி ஒரு புது விஷயத்தை ஆரம்பிக்கலாம் என மார்ச் மாதம் நினைத்தால் இரண்டாம் அலை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பி தூக்கி அடித்துவிட்டது. என்னுடைய 40+ ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு தொற்று ஒரு மனிதனின் வாழ்க்கையில் இந்த ஆட்டம் ஆடுகிறது என்பதை பார்த்துகொண்டிருக்கிறேன். சில விஷயங்களை நாம் முயற்ச்சி செய்து பார்க்கலாம் அவ்வளவுதான். அதற்காக நாம் வருத்தப்பட்டு என்ன ஆகபோகிறது. 

இயற்க்கை மனிதனை எப்பொழுதும் கைவிடுவதில்லை. ஆம் மார்ச் மாதம் போன வாய்ப்பு செப்டம்பரில் தானாக கையில் வந்து விழுகிறது இதோ இந்த இந்த வருடத்தின் 4 உபயோகமனா மாதங்களை கடந்துவிட்டேன். மீதி 8 மாதம் என்ன செய்தாய் என்று கேட்கிறீர்களா? இந்த ஐடி துறை என்பது உலக பிஸினஸ். ஏதாவது வந்து நம்மை காப்பாற்றிவிடும். அது இறைவன் செயல். சர்வீஸ் பிஸினஸ் எனபதே கத்தியில் நடப்பதுதான். ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை ஏது?

பிரமாண்ட மாற்றங்கள் ஏதும் இல்லை. கொரானாவின் இரண்டாவது அலையில் தப்பி ஓடுவதிலேயே நாம் குறியாக இருந்ததால் பிஸினஸ் இரண்டாவதுதான். இதோ இப்பொழுது மீண்டும் ஒரு அலை வருமா வராதா என குழப்பம் இருக்கிறது. மார்ச் மாதம் 2020 சென்னையின் வீட்டை விட்டு ஓடிய பயணம் இன்றும் நிற்க்வில்லை. ஓடினேன் ஓடினேன் சொந்தவீட்டிற்கும் சென்னையின் வாடகை விட்டிற்கும் இடையில் ஓடினேன். இந்த ஓட்டத்தை யாரால் தடுக்கமுடியும்? இந்த வாட்டத்தை யாரால் போக்கியிருக்க முடியும். நிச்சயமாக யாராலும் அல்ல ஏனெனில் அவரவர்கள் உயிரை காப்பாற்றிகொள்ள வீட்டில் அடைந்துகிடைந்தார்கள்.சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். 

இன்ஜினியரிங்கில் சாதித்த விஷயங்கள் இந்த உலகம் ஏனோ மருத்துவதுறையில் சாதிக்கவில்லை. ஆம் ஒரு சிறு வைரஸ் இரண்டு ஆண்டுகாலம் இந்த உலகத்தை ஆட்டி படைக்கிறது ஆனால் இன்னும் தீர்வு எட்டபடவில்லை என்பது மருத்துவதுறையின் மீதே நம்பிக்கை இழக்கவைக்கிறது. அதுசரி HIV க்கே மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை பிறகு இதற்கு மட்டும் எப்படி அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்துவிடுவார்கள். டெஸ்லாவும், எடிசனும் மருத்துவதுறையில் பிறக்காமல் போய்விட்டார்கள். இன்றும் TB என்றால் தூர ஓடுகிறோம். டெங்கு என்றால் திக்கற்றுநிற்கிறோம். போன நூற்றாண்டின் தீர்க்கபடாத வியாதிகளே இதுவரை மனித சமுதாயத்தை மிரட்டிகொண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டின் புதிதாய் பிறந்திருக்கும் வியாதிகள் எப்பொழுது தீர்க்கப்டும். அடுத்த நூற்றாண்டிலா? ஒரு மெஷினும், மனித உடலும் ஒன்றா என நீங்கள் கேட்காலம், இல்லைதான் ஆனால் இன்ஜினியரிங் இன்றும் மருத்துவதுறைக்கு அதிநவீன சாதணங்களை வழங்கி கொண்டிருக்கிறது. இன்று வியாதிகள் கண்டுபிடிப்பது துரிதகதியில் நடக்கிறது. நான் உணர்ந்த ஒரு விஷயம், இந்த மருத்துவதுறைக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். அது வேறு யாரால் முடியும், சாட்சாத் Google ம் Apple ம் மட்டுமே இதை செய்யமுடியும். R&D க்கு பல பில்லியன் டாலர்செலவு செய்ய இந்த ஜாம்பவன்களால்தான் முடியும். Electronics மற்றும் இன்ஜினியரிங்கில்  தேவைக்கு அதிகமாகவே இந்த உலகம் தன்னிறைவு அடைத்துவிட்டது ஆனால் போன நூற்றாண்டின் இத்து போன வியாதிகளை கட்டி அழுதுகொண்டிருக்கும் இந்த உலகத்திற்கு Engineers யின் தேவை அதிகமாக இருக்கிறது. 

எதையோ எழுதபோய் இதை எழுதிவிட்டேன் காரணம் இரண்டு வருடங்கள் இதில் நாம் இழந்திருக்கிறோம். எத்தனையோ சொந்த பந்தங்களை இழுந்திருக்கிறோம், பல குடும்பங்கள் நடு தெருவிற்க்கு வந்துவிட்டன. இந்த கொரானா அதுவாக நீர்த்துபோய் சாதாரண சளி ஜலதோஷமாக மாறாதா என இந்த உலகம் எதிர்பார்க்கிறது. அதுவரை இந்த அலைவிளையாட்டை ஆடவேண்டியதுதான்.

எப்பொழுதும் ஒரு பிரமாண்ட கனவை சுமந்துகொண்டே ஒவ்வொரு வருடத்தையும் கடப்பேன். நான் கனவு என்றதாலோ என்னவோ அது கனவாகவே போய்விடும்போல. ஆனால் நம்பிக்கை என்ற ஒன்றை அந்த கனவு கொடுக்கிறது அதனால் அந்த கனவை நான் இன்றும் காண்கிறேன். இது தூங்கும்போது வரும் கனவு அல்ல, முழு விழிப்பில் இருக்கும்போதும் நம்மை தூங்கவிடாமல் செய்யும் கனவு. கனவு கைக்கூட இறைவனை பிராத்திக்கிறேன்.

இந்த வருடம் நீங்கள் மனதில் நினைத்த அத்தனை விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். அனைத்தும் கைக்கூடும். என்னுடைய அத்தனை நண்பர்கள், என் நலம் விரும்பிகள், இந்த வலைதளத்தின் வாசக சொந்தங்கள் என அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நன்றி

தா.முகமது காமில்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2021

Thursday 31 December 2020  at December 31, 2020;



 வருடத்தின் இறுதி நாளில், கடந்து போன அந்த 365 நாட்களை பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுவேன். பிறகு வரக்கூடிய புத்தாண்டின் நான் மேற்கொள்ளவிருக்கும் விஷயங்களை பற்றி சிறுது எழுதுவேன். அத்துடன் மீண்டும் அடுத்த வருடம் சந்திப்பு.

வருடத்திற்கு ஒரே ஒரு முறை இந்த ப்ளாக்கில் எழுதி வருகிறேன். மகிழ்ச்சி.

2020- பேன்ஸி நம்பர், விஐபி நம்பர். பேன்ஸி நம்பர் என்றாலே பேன்டஸி கனவுகள் தானே.. கனவு கண்டேன், இந்த வருடம் நம் வாழ்க்கை வேறு மாதிரியாக போகிறது என்று. ஆனால் இந்த வருடம் அனைத்தையும் புரட்டி போட்டுவிட்டது. என் தனி ஒருவனை மட்டும் அல்ல, உலக மக்கள் அனைவரையும் வீட்டு சிறையில் அடைத்துவிட்டது. பதபதைக்கும் மார்ச் மாதம் சென்னையை விட்டு வந்தது. மறுபடியும் திரும்ப வில்லை. Work from home யில் இருக்கும் சொளகர்யம், சோம்பேறிதனம் மீண்டும் சென்னைக்கு போகவிடாமல் தடுக்கிறது. இதோ அதோ என்று அக்டோபர் மாதத்தில் இருந்து டிரை செய்கிறேன், வருடமே முடிந்துவிட்டது. மோசமில்லை. மீண்டும் சென்னைக்கு செல்வது என்பதுதான் இந்த வருடத்தின் உடனடி சேலன்ஜ். அநேகமாக ஜனவரி மாதம் சென்னை திரும்பிவிடுவேன். நிற்க.


கடந்துபோன வருடத்தில் நான் மூன்று ஊர்களில் இருந்தேன். ஒன்று செங்கம், இரண்டாவது வேலூர் சைதாப்பேட்டை மூன்றாவது காட்டுமன்னார்கோயில். உண்மையை சொல்லவேண்டும் என்றால், இரண்டு மாதங்கள் கழித்துதான் ப்ராஜக்ட் வேலையையே ஆரம்பித்தேன் அதுவும், வேலூர் சைதாப்பேட்டை வந்தபிறகு. வேலூரில் சுமாராக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இருந்திருப்பேன். இதுவரை CMC ஆஸ்பிட்டலுக்கு செல்லும்போது 2 அல்லது 3 நாட்கள் தங்கியவன் இந்த கொரானா காலத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்கியது ஆச்சரியமாக இருந்தது. ஏசி இல்லை, வசதி இல்லை ஆனாலும் நிம்மதியாக உறங்க முடிந்தது கொசு இல்லாததால். கொரானாவுக்கு அடித்து பிளீச்சிங் பவுடரில் கொரானா செத்ததோ இல்லையோ கொசுக்கள் செத்தது. எனக்கு இது மும்பையின் மரோல் மரோஷியில் தங்கி இருந்த நினைவை தூண்டியது. அனைத்தையும் ஏதோ ஒரு நேரத்தில் சந்தித்தே ஆக வேண்டும் நம் சுகங்களை தியாகம் செய்தாகவேண்டும் என்று விஷயத்தை இந்த ஆண்டு எனக்கு கற்றுகொடுத்தது. 


நிறைய விஷயங்களை கற்பனை செய்துவைத்திருந்தேன் ஆனால் அனைத்தும் இந்த கொள்ளை நோய் காலத்தில் கைவிடப்பட்டது. ஆனால் அதை மீண்டும் உயிர்பிப்பது என் கடமை அதை இந்தாண்டு செய்து முடிப்பேன். இதோ இந்த காட்டுமன்னார்கோயில் இருந்து இதை டைப் செய்கிறேன். இந்த ஊரியிலிருந்து சென்னைக்கு கிளம்புவதற்குள் நான் என் முதல் அடியை இங்கே என் சொந்த ஊரில் அழுத்தமாக பதிக்கபோகிறேன். எப்படி என்று கேட்கிறார்களா? அதற்கான வேலையை கடந்த 10 நாட்களாக செய்து முடித்திருக்கிறேன். இந்த திட்டம் வெற்றிபெற்றால் இதை மற்ற பிற ஊர்களுக்கு, முக்கியமாக மடிப்பாக்கத்திற்கு கொண்டு வருவேன். 


நீண்ட பயணத்திற்கான முதல் அடி என்பது எடுத்து வைத்தாகிவிட்டது இந்த மண்ணில், பயணம் இனி அதை நோக்கி மெல்ல நகரும். ஓகே.


இந்த வருடத்தில் ஏதாவது முக்கியமான விஷயம் நடந்ததா என்று நீங்கள் கேட்கலாம். ஆம் ஒன்று அல்ல நிறைய. வியாபார விஷயத்தில் பெரிய முன்னேற்றம் இல்லை. கிணற்றில் போட்ட கல் போல இருக்கிறது. இந்த கல் மேலே வர கிணறு நிரம்பினாலும் முடியாது போல இருக்கிறது. சும்மா சுய பகடி ;) தொழில் வளர்ச்சிக்காக இந்த வருடத்தில் சில பகீரத முயற்ச்சிகளை செய்யவேண்டி உள்ளது. குடும்பத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்தன. பத்தாண்டு கால தவம் வெற்றி பெற்றது இறைவன் அருளால். புகழனைத்தும் இறைவனுக்கே. இந்த ஒரு விஷயத்திறாக இந்த ஆண்டு மிகவும் மிக்கியமானது எனது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும். 


என்னுடைய மற்றும் உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் இந்த வருடத்தில் கைகூட இறைவனை பிராத்திக்கிறேன். நல்லதே நடக்கும். நல்லதே நினைப்போம். 


வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு. 

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Wednesday 1 January 2020  at January 01, 2020;

எவரெஸ்டில் ஏறுவதுபோல் இருக்கிறது
ஒவ்வொரு ஆண்டையும் கடப்பது.
கித்னா கிலோமீட்டர் பையா என கேட்கும்போதெல்லாம்
தோ தோ என காலம் போய்கொண்டே இருக்கிறது.
சில நேரங்களில் நாம் போய்கொண்டிருக்கும்
திசை சரியா என எனக்கே சந்தேகம் வந்துவிடுகிறது.
இந்த திசையையும் கருவியையும் ஏனோ
கர்ணனின் கவசகுண்டலம்போல் பிறந்ததிலிருந்தே
சுமப்பதுபோல் இருக்கிறது எனக்கு.
நாம் உச்சியை நோக்கி பயணிக்கும்போது
கடந்துவந்த பாதையை பார்த்தால் நமக்கு
மயக்கம் வரும் என்பதனால் எனக்கு
பின்னால் என்ன நடக்கிறது என்பதைகூட
பார்க்காமல் நடக்கும் கருமமே கண்ணாயிரம்போல்
இருந்ததால் நிறையபேரை இழந்திருக்கிறேன்.
உச்சியில் எனக்கான உலகம் இருக்கிறது என
கனவு காண்கிறேன் அதில் வாழ்கிறேன்.
அதையே எனக்கான வாழ்க்கை ஆக்கிகொண்டேன்.
சறுக்கல்கள் என்பது சாதாரண விஷயம்தான்
உச்சியை நெருங்கும்வரை.
பல சறுக்கல்கள் மூலம் அடிவாரம் தொட்டு
அதிலிருந்து மீண்டு மீண்டும் உச்சியை நோக்கி
பயணிப்பவர்களுக்கு அதுவும் ஒரு சுவாரசியம்தான்.
இந்த தேடல் மட்டும் இல்லையெனில்
நான் நானாக இருக்கமுடியாது.
இந்த விளையாட்டை ஆராதிக்கிறேன்
அணுஅணுவாய் அனுபவிக்கிறேன்.
இந்த ஆண்டு நிறைய சறுக்கல்கள்
ஆனால் அதைவிட நிறைய சந்தோஷம்.
கல் என நம்பி நாம் பிடிக்கப்போய்
அது விஷ ஜந்தவாய் மாறியதெல்லாம்
நல்ல அனுபவம்.
இதுதான் பக்குவம் எனில் இந்த
புண்ணாக்கு பக்கவத்தை நான் அடையவே தேவையில்லை.
இன்றும் என் மனம் ஒரு குழந்தைபோலவே இருக்கிறது
20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் எப்படி இருந்தேனோ
அதே அன்பும் பேச்சும் அப்படியே இருக்கிறது.
யாருக்காகவும் எதற்காகவும் என் சுபாவத்தை மாற்றிகொள்ளாதவன்
கடந்துபோகும் ஆண்டுகளுக்கா மாற்றிவிட போகிறேன்.
ஸ்டீபன் ஸ்பீர்க்பெர்க் கிழவனாய் ஊன்றி நடந்தாலும்
அவன் மனம் இன்னும் ஜூராசிக் பார்கில் சுற்றுவதுபோல்
மனதை இளமையாய் வைத்திருக்கிறேன்.
இந்த 2020 வில் இந்தியா வல்லரசு ஆகும் என
கனவை கண்ட ஐயா அப்துல் கலாம் போல்
நானும் இந்த ஆண்டில் புது உச்சியை தொட்டுவிடலாம்
என்று நினைக்கிறேன்.
இறைவன் அருளட்டும்.
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Sunday 31 December 2017  at December 31, 2017;

இந்தாண்டு நல்லபடியாக முடிகிறது. 2017 ஐ பொருத்தவரை இந்த ஆண்டு நிறைவான ஆண்டு,  பல குறைகளை களைந்த ஆண்டு. ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வைத்திருக்கின்ற ஆண்டு. 2018 ஐ மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நிறைய கனவுகள். நிறைய ஆசைகள். என் வாழ்வின் அடுத்த பத்தாண்டுகளை இந்த ஆண்டு தீர்மானிக்கும். ஏனெனில் சில கதவுகளின் சாவிகள், திறக்கபடவுள்ளன.

ஆண்டுகளுக்கான காலண்டரை மாற்றும்போது நமக்கும் வயதாகி கொண்டிருக்கிறது என்ற ஒரு தவிப்பு உண்டாவதை தவிர்க்கமுடியவில்லை. வயது ஏறிக்கொண்டு சென்றாலும் மனம் இன்னும் குழந்தைபோல தூகாலத்தில் இருப்பதினாலேயே
எதையும் எதிர்கொள்ளமுடிகிறது. இறைவன் அருள் நமக்கு எல்லாம் கிடைத்து இந்த 2018 ஆண்டு அனைவருடைய வாழ்வில்
மிகப்பெரிய வெற்றியை கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

கடந்த ஆண்டு இந்த ப்ளாக்கை கூடுமானவரை அப்டேட் செய்ய எத்தனித்தபோதும் வேலைபளுவால் முடியவில்லை. இந்தாண்டும் இதே Resolution தான். முடிந்தவரை இந்த ப்ளாக்கரை காட்டுமன்னார்கோயில் domain வுடன் இனணக்கபார்க்கிறேன்.காட்டுமன்னார்கோயில் நண்பர்கள் நிறையபேர் இணையத்தளங்களையும், வலைப்பூவையும் அப்டேட் செய்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. காட்டுமன்னார்கோயில் இணைய நண்பர்கள் என்ற ஒரு குழுவை நாம் உருவாக்கி வருடத்தில் ஒருமுறை சந்திக்கவேண்டும் என்ற ஆசை உள்ளது. நான் நிரந்தரமாக சென்னையில் தங்கிவிட்டதால்
எனக்கு காட்டுமன்னார்கோயில் செய்திகள் அப்டேட் ஆவதில்லை. இருந்தும் என்னுடைய நினைவை என் ஊரை சுற்றியே இருக்கும்.

அடுத்தடுத்து வரும் அப்டேட்களில் என்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கிறேன். என்னுடைய ப்ளாக்கை தொடர்ந்து வாசித்து ஆதரவளித்துவரும் என்னுடைய நண்பர்கள், மன்னை சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் இந்தாண்டை தொடங்குகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
காட்டுமன்னார்கோயில் முகமதுகாமில். தா.

மழையை வரவேற்போம்

Sunday 29 October 2017  at October 29, 2017;

கண்ணீர் அஞ்சலி - தியாகராஜன் சார்

Thursday 7 September 2017  at September 07, 2017;
2012 ஜனவரி மாதத்தில் மடிப்பாக்கத்தில் எனக்கொரு அடைகலத்தை கொடுத்தவர். என் மாமாவின் நெருங்கிய நண்பரின் மாமனாராக எனக்கு அறிமுகம் செய்யப்பட்டவர். தன்னுடைய மருமகனின் மீதான அன்பின் காரணமாக எனக்கு தன்னுடைய வீட்டை கம்பெனி நடத்துவதற்கு அனுமதி அளித்தார். 
அதிமுகவின் கவுன்சிலர் ஆகும் அளவுக்கு மடிப்பாக்கம் பகுதியில் பிரபலமாக இருந்தவர். இதற்கு காரணம் அவர் வியாபாத்தில் கொடி கட்டி பறந்ததாகக்கூட இருக்கலாம். இந்த பகுதியில் அதிகமான கட்டிடங்களின் மரவேலைப்பாடுகள் இவர் கைவண்ணத்தில் உருவானவையே.
கிட்டதட்ட நான்கு வருடங்கள் அவர் வீட்டை கம்பெனி நடத்துவதற்கு மற்றும் தங்குவதற்கு கொடுத்த நல்ல மனதுகாரர். நான் அவருடைய வீட்டின் கீழ்தளத்தில் இருந்தவரை அவரின் அன்புக்கு பாத்திரமாக இருந்திருக்கிறேன். எந்த விஷயம் என்றாலும் என்னுடன் பகிர்ந்துகொள்ளும் வெள்ளந்தியான மனிதர். 
மூன்றாம் முறை ஹார்ட் அட்டாக் வந்தபோது அவரை மருத்துவமனை சென்று பார்த்தேன், சென்ற வாரம் நான்காம் அட்டாக் வந்தபோது அவரை உயிரற்ற சடலமாக பார்த்தபோது என்னை அறியாமலேயே துக்கம் தொண்டையை அடைத்தது. 
அவருடைய வீட்டில் இருந்து சென்றவர்கள் மிக நன்றாக வருவார்கள் என் நன்மறாயம் சொன்னவர்.  ஏனோ கம்பெனியை அண்ணாநகருக்கு மாற்றியபிறகு அவரை தனியே சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டவே இல்லை. வழியில் செல்லும்போது ஒரு வணக்கம் வைப்பேன். புன்முறுவலுடன் ஏற்றுகொள்வார். சிறந்த பக்திமான். கொடைவள்ளல். 

காலவெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த என்னை காபந்து செய்ய கரம் நீட்டியவர். வீடுகள் மாறினாலும் சென்னையின் மடிப்பாக்கத்தை என்னின் அடையாளமாக மற்றிய கலங்கரை விளக்கம். காலம் உங்களை மறந்தாலும் நான் மறவேன்!! உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Saturday 31 December 2016  at December 31, 2016;

காட்டுமன்னார்கோயில் மக்களுக்கும், எனது தளத்தை தொடர்ந்து படித்துவரும் எனது அன்பு வாசகர்களுக்கும் இந்த தருணத்தில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 
2016 யில் சொற்ப எண்ணிக்கையில்தான் ப்ளாக் எழுத முடிந்தது. இந்த வருடம் அதிகப்படியான ப்ளாக்குளை எழுத நினைக்கிறேன். 
2016 எனக்கு மிக முக்கியமான வருடமாக இருந்தது. வியாபாரத்தில் இது எனக்கு ஒரு திருப்புமுனை ஆண்டு. 5 ஆண்டுகால எனது வியாபாரத்தை மேலும் பலமாக்கும்விதமாக சில நல்ல விஷயங்கள் 2016 யில் நடந்தது. இந்த நல்ல வாய்ப்பினை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.
இந்த ஆண்டு வியாபாரத்தில் விருத்தியை கொடுத்திருக்கிறது. சில கெட்ட விஷயங்களும் நடந்தேறியுள்ளது. பயம்படும்படி இல்லை அது அளவுக்கு நல்லது என நினைக்கிறேன். கனவு போல் இருந்திடகூடாதா  என நினைத்த சில விடியல்கள் அதுவாகவே ஆகிவிட இறைவனை தொழுகிறேன்.

வாழ்த்துக்களுடன்,
முகம்மது காமில் தா


ஜெ.ஜெ

Tuesday 6 December 2016  at December 06, 2016;
தீவிரமான திமுக அனுதாபியாக இருந்தாலும், திரு செல்வி. ஜெ.ஜெயலலிதா மீது எப்பொழுதும் மரியாதையும், அன்பும் உண்டு. தனித்து விடப்பட்டபோதும் கால ஓட்டத்தில் காணாமல் போகாமல், தனக்கான ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிகொண்ட உண்மையான இரும்புபெண்மனி. இவரைபோல் இனி ஒரு பெண் இனி தமிழ்நாட்டை ஆள்வார் என்பது சாத்தியமே இல்லை.

ஜெ.ஜெ வில் தொடங்கி ஜெ.ஜெ வில் முடிகிறது, ஒரு பெண்ணிணத்தின் நம்பிக்கை.